x

ஆகஸ்ட் 04 : மகிழ்ச்சியோடு வாழ

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


மகிழ்ச்சியோடு வாழ :

“மனிதன் என்ற தத்துவத்தை நான்கு சிறப்பு நிலைகளாகப் பிரிக்கலாம். அவை

1) உடல்

2) உயிர்

3) மனம்

4)மெய்ப்பொருள்

என்பனவாகும். இந்நான்கும் பொருள் நிலையில் ஒன்றுதான் ஆனால் இயக்கச் சிறப்புகளால் பிரித்து உணரத்தக்கவையாக இருக்கின்றன. ஒரே பொருள் அதன் இயல்பான பரிணாம உணர்ச்சியால் நான்கு நிலைகளையும் அடைந்து ஒன்றில் ஒன்றாக நான்கும் இணைந்து இயங்கும் சிறப்பே மனிதனாக விளங்குகின்றது.

உடல் என்பது ஆற்றலின் (Mass) திரட்சியே. ஆற்றல் (Energy) என்பது மெய்ப்பொருளின் இயக்க நிலையே. மெய்ப் பொருள் தான் ஆற்றலுக்கு நிலைக்களம் (Static State). இதனை வெட்டவெளி என்கிறோம். வெட்டவெளியே தனது இயக்கத்தில் ஆற்றல் ஆகிறது. ஆற்றலின் திணிவு உடல். உடலில் நிறைந்த ஆற்றல் உணர்ச்சியெனும் சிறப்புற்று உடலை உணர்ந்து, பேரியக்க மண்டல தோற்றங்களை உணர்ந்து, உணரும் ஆற்றலான உயிரையும் உணர்ந்து முடிவாகத் தனது மூல நிலையான மெய் நிலையை நிலைக்களனாக உள்ள ஆதிநிலையை உணர்ந்து முழுமை பெறுகிறது.

உணர்ச்சியிலிருந்து முழுமை பெறும் வரையில் நடைபெறும் சிறப்பாற்றல் தான் மனம் (Mind) என்றும் அறிவு (Consciousness) என்றும் வழங்கப்படுகின்றது. எனவே மெய்ப்பொருள், ஆற்றல், தோற்றம், மனம் (Truth, Energy, Mass, Consciousness) என்ற நான்கு நிலைகளும் ஒரு பொருளின் பரிணாம வளர்ச்சியின் வேறுபாடுகளே. இந்த விளக்கத்தையே பேரியக்க மண்டல இயக்கங்கள் அனைத்தையும் மதிப்பிட அடிப்படையாகக் கொள்ளலாம்.


நுண்ணிய இயக்க ஆற்றலான பரமாணு முதல் பெரும் பெரும் நட்சத்திரங்கள் உட்பட மனதில் கொண்டு ஆழ்ந்து ஆராய்ந்தால் ஒரு பேருண்மை விளங்கும். ஒவ்வொரு அணுவும் அல்லது அணுக்கொத்தும் தன்னியக்கம், தொடரியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், விளைவு என்ற நான்கு வகையான தன்மைகளோடு இயங்குகின்றன. எந்த ஒரு இயக்கமும் தனியாகத் துண்டுபட்டு நடைபெறுவதில்லை. பேரியக்க மண்டலம் என்ற கோர்வையில் அமைந்துள்ள இயற்கை ஒழுக்கமைப்பை நாம் காரண-விளைவு நியதி (Causes and effect system) என்று கூறுகிறோம்.

இந்த விளைவின் கீழ் தோன்றிய மனிதனின் நோக்கம் அறிவின் முழுமை பெற்று அமைதி பெறுவதேயாகும். அறிவின் முழுமைக்கு வாழ்க்கை அனுபவம் வேண்டும். அவ்வனுபவத்திற்கு உடல் என்ற நற்கருவியை நன்றாகப் போற்றி காத்து பயன்படுத்த வேண்டும். எனவே மனிதன் தனது நோக்கத்தை ஒட்டி இயல்பாக வாழ்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் பொறுப்போடு காப்பது என்ற இரண்டு வகையிலும் உணர்ந்தாற்ற வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

முக்களங்கங்களிலிருந்து விடுதலை :

“முன் முனைப்பு, பின் முனைப்பு இரண்டால் ஏற்ற

முக்களங்கம் எவையென்றால் மெய்மறந்த

தன்முனைப்பு, பழிச் செயல்கள், பொருள் மயக்கம் –

தளை மூன்றாம் இவை களைந்து உய்யவவென்றால்

உன் முனைப்பு குறைத்திட்டு உள்ளுள் நாடும்

உயிர்த் தவமும் அறநெறியும் சிறந்த பாதை

நன்முனைப்பாய் உயிர்நாட்டம் திரும்பி விட்டால்

நாள்தோறும் விடுதலையின் இனிமை காண்பாய்”.

எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுகளுக்குள்

மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கிவிடும்.

சிந்தனை:

இன்பத்தும், துன்பத்தும், இயற்கையும் கற்பனையும்

சிந்தித்து அறிபவன், சிறப்பாக வாழ்வான்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!